சந்திரனின் மேற்பரப்பை முப்பரிமானப் படம் பிடிக்கவும் ஆராயவும் என்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால், கிட்டத்தட்ட 4 பில்லியன் இந்திய ரூபாய்கள் செலவில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான் - 1 விண்கலம் அதன் அனைத்துத் தொடர்புகளையும் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இழந்ததை அடுத்து அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு அக்டோபர் திங்களில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இரண்டு ஆண்டுகள் ஆய்வுப் பணி தீர்மானிக்கப்பட்டு இக்கலம் சந்திரன் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அதன் ஆயுள் ஓராண்டுக்குள்ளாகவே முடிவுக்கு வந்து விட்டது.
சந்திரயான் - 1 திட்டம் பகுதியாக என்றாலும் வெற்றி பெற்றுள்ளதாகவும் பல பெறுமதி மிக்க தரவுகளை அது சந்திரனில் இருந்து பெற்றுத் தந்திருப்பதாகவும் இத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் கூறியுள்ள போதும்.. பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து (மற்றைய நாடுகளின் சந்திரனுக்கான விண்கலங்களின் பெறுமதியோடு ஒப்பிடும் போது இதன் செலவுத் தொகை குறைவாகும்.) இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் பூரண பலனைப் பெற முடியவில்லை என்றே பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள், வெப்பநிலை உயர்வு மற்றும் முக்கிய உணரி சம்பந்தபட்ட பிரச்சனைகள் என்று கடந்த காலங்களிலும் அதன் தொழிற்பாடு சீரற்றே இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கலத்தில் இந்தியத் தயாரிப்பு பாகங்கள் 5ம் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜேர்மனியத் தயாரிப்பு பாகங்கள் 6ம் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments