| தென் ஆப்பிரிக்க நாட்டில் ஜோகனஸ்பர்க் நகரின் வடக்கு புறநகரில் ஆர்கிட் என்ற பகுதி உள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் தங்கி இருந்தபோது, இங்கு அமைந்திருக்கும் “தி கிரால்” என்ற வீட்டில் 1907-ம் ஆண்டில் இருந்து 3 வருடங்கள் வசித்தார். இந்த வீட்டின் உரிமையாளர் நான்சி பால் என்பவர் ஆவார். அண்மையில் இவர் வீட்டை விற்றுவிட்டு வேறு நகரில் குடியேற முடிவு செய்தார். இதையடுத்து வீட்டை ஏலத்தில் விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் விலை அதிகமாக இருந்ததால் யாரும் வாங்க முன்வரவில்லை. இந்தநிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பிரதீப் பாவ்னானி என்பவர், காந்தி அடிகள் வசித்த வீட்டை வாங்க முன்வந்துள்ளார். அது மட்டுமல்ல, இந்த வீட்டை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் அவர் முடிவு செய்து இருக்கிறார். வீட்டை வாங்குவதற்காக அதன் உரிமையாளர் நான்சி பாலுக்கு பணம் அனுப்ப, தனக்கு அரசு முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு தொழிலதிபர் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தொழில திபர் பிரதீப் பாவ்நானி கூறி இருப்பதாவது:- தென் ஆப்பிரிக்காவில் காந்தி வசித்த வீட்டை ரூ.2 1/2 கோடிக்கு வாங்க முடிவு செய்தேன். இதற்கு வீட்டின் உரிமையாளரான நான்சி பால் சம்மதித்துள்ளார். இதற்கான நடைமுறைகள் முடிந்ததும் இந்த வீட்டை இந்திய அரசிடம் ஒப்படைப்பேன். இதன்மூலம் காந்தி வாழ்ந்த வீட்டை ஒரு அருங்காட்சியகமாகவோ அல்லது நினைவுச் சின்னமாகவோ பாதுகாக்க முடியும். எனவே காந்தி வசித்த வீட்டை வாங்குவதற்கு அரசு எனக்கு முறைப்படி அனுமதி தர வேண்டும். இதன்மூலம் காந்தி வாழ்ந்த வீட்டை நாட்டுக்கு அர்ப்பணிக்க முடியும். இவ்வாறு தொழிலதிபர் பாவ்நானி தனது கடிதத்தில் கூறி உள்ளார். |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள காந்தி வசித்த வீட்டை வாங்க மும்பை தொழிலதிபர் முடிவு
Posted by
Admin
8/2/09

0 comments