
செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற மேற்கிந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது, இறுதி ஒரு நாள் போட்டியிலும் வங்கதேச அணி மேற்கிந்திய அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை 3- 0 என்று கைப்பற்றி மேற்கிந்திய மண்ணில் எந்த அணியும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.
முதலில் பேட் செய்த மேற்கிந்திய அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 3 ஓவர்களில் துவக்க வீரர் போவெல் மற்றும் அதிரடி வீரர் டிவைன் ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழந்தும், இரண்டாம் ஒரு நாள் போட்டியில் சதம் எடுத்த டௌலினும், பிளெட்சரும் 15 ஓவர்களில் ஸ்கோரை 86 ரன்களுக்கு உயர்த்தினர். பிளெட்சர் 42 பந்துகளில் 8 பவுண்டரிகல் 3 சிக்சர் சகிதம் 52 ரன்கள் எடுத்து அப்போது ஆட்டமிழந்தார்.
டௌலின் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். உடனேயே பெர்னாடும் ஆட்டமிழக்க மேற்கிந்திய அணி 28-வது ஓவரில் 124/5 என்று சரியும் நிலை ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரெய்ஃபர், டேரன் சம்மி ஆகியோர் முறையே 40 ரன்கள் எடுத்து அணியை நிலை நிறுத்தினர். கடைசியில் டி.சி. தாமஸ் 29 ரன்கள் எடுத்து நாட்-அவுட்டாக இருந்தார்.
மேற்கிந்திய அணி நல்ல துவக்கத்தை பெற்று பின்பு கோட்டை விட்டது. இதனால் 248 ரன்களுக்கு இன்னும் இரண்டு ஓவர்கள் இருக்கும் நிலையில் சுருண்டது.
வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் ஜுனைத் சித்திக் (55), தமீம் இக்பால் (30) ஆகியோர் அபாரத் துவக்கத்தை அளித்தனர். ஆனால் அக்ச்ரஃபுல், ராகிபுல், ஷாகிப் அல் ஹஸன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணியும் 28-வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் என்று சற்றே திணறியது.
ஆனால் அதன் பிறகு மகமதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹிம் இணைந்து நிதானமாக 12 ஓவர்களில் 50 ரன்களைச் சேர்த்தனர். கடைசி 10 ஓவர்களில் வங்கதேசத்திற்கு தேவை 65 ரன்கள் என்ற நிலை இருந்தது.
ஆனால் மஹமுதுல்லா, நயீம் இஸ்லாம் ஆகியோர் அடுத்த 43 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஸ்கோரை 46.5 ஓவர்களில் 232 ரன்களுக்கு உயர்த்தினர். அதன் பிறகு மஹமுதுல்லா வெற்றியை உறுதி செய்தார். 48.5 ஓவர்களில் வங்கதேசம் 249/7 என்று வெற்றி பெற்று தொடரை 3- 0 என்று கைப்பற்றியது.
மஹமுதுல்லா 70 பந்துகளில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 51 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாக இருந்தார். பந்து வீச்சிலும் சிக்கனமாக வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் ஆட்ட நாயகனாக இவர் தேர்வு செய்யப்பட்டார்.
தொடரின் நாயகனாக ஷாகிப் அல் ஹஸன் தேர்வு செய்யப்பட்டார்.

0 comments